Friday 1 April, 2011

தொழில்

      "அம்மாடி கவிதா ... பாப்பாவ கொஞ்சம் பிடி, நான் போய் சாதம் வெந்துட்டானு பார்த்துட்டு வரேன்" என்றாள் மங்களம்.

     "ஐயோ என்னால பிடிக்க முடியாது, அங்க பாருங்க அவளுக்கு எப்படி மூக்கு ஒழுகுதுன்னு,  நான் வேற குளிச்சிட்டு டியூட்டிக்கு போக டிரஸ் எல்லாம் மாத்திட்டேன், நான் தூக்க மாட்டேன்பா" என்றாள். 

     "அவள் எப்போதும் ஆசையாய் தூக்கி கொஞ்சும் அவளது அக்கா குழந்தைதான்  அது. ஆனால் இன்று அந்த குழந்தைக்கு சளி பிடித்துக்கொண்டு மூக்கு ஒழுகுகிறது, அதனால் தான் குழந்தையை  தூக்க மாட்டேன் என்கிறாள் அவள். 

     அவள் அப்படித்தான் எல்லாவற்றிற்கும்  சுத்தம் பார்ப்பாள். குழந்தை டாய்லெட்  போய்விட்டால் கூட அவ்வளவுதான் சிறிது நேரத்திற்கு அந்த பக்கமே வரமாட்டாள். ஐயோ எனக்கு வாமிட் வரமாதிரி இருக்கு, வயிற்றை குமட்டுது  என சாப்பிடாமல் ஓடி விடுவாள்.

     "சரிம்மா எனக்கு டயம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்" என்று கடைசிவரைக்கும் குழந்தையை தூக்காமல்  புறப்பட்டுவிட்டாள்.

     மருத்துவமனைக்கு  வந்ததும் கலர் ஆடையிலிருந்து வெள்ளை நிற 
யூனிபார்முக்கு  மாறினாள். இன்று அவளுக்கு குழந்தைகள் வார்டுல டியூட்டி உள்ளே நுழைந்ததுமே  ஒரு ஏழு வயது குழந்தை நெஞ்சை பிடித்துகொண்டு வாமிட் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. அருகில் குழந்தையின் அம்மாவும் இல்லை. கவிதா உள்ளே நுழைந்த நேரம் அந்த குழந்தை வாமிட் எடுக்க ஆரம்பித்தது. கவிதா ஓடி போய்  அவளது இரு கைகளையும் ஏந்தினாள் அந்த குழந்தை வாமிட் எடுக்க.
      


No comments:

Post a Comment