ராஜா வழக்கம் போலவே இன்றும் சரியாக காலை ஏழு மணிக்கு தெரு முனையில் இருக்கும் டீ கடைக்கு வந்துவிட்டான்.
சுபா 7 .15 க்கு அந்த டீ கடையை கடந்து போவாள்.
இன்று எப்படியாவது சுபாவிடம் மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும் என்று அவளிடம் சொல்ல வேண்டியதை மனதில் சொல்லி ஒத்திகை பார்த்து கொண்டான் ராஜா.
சுபா ஒரு பத்து அடி துரத்தில் வைலெட் நிற ஸ்கூட்டியில் மஞ்சள் சுடிதார் அணிந்து மஞ்சள் தேவதையாய் வந்துகொண்டிருந்தாள்.
அவள் டீ கடையை கடக்கும் நேரத்தில் ராஜா தனது வலது கையை நீட்டி அவளை வழி மறித்தான்.
அவளும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி தனது கூர்மையான விழிகளால் பார்த்தாள்.
"உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. ரொம்ப அழகா டிரஸ் பண்றீங்க. ஆனா உங்க துப்பட்டாவ மட்டும் காத்துல இப்படி பறக்க விட்டுட்டு போறீங்க. அது சில சமயம் உங்க ஸ்கூட்டி வீல்ல கூட படுது. இது ரொம்ப ஆபத்துங்க. இனிமே இப்படி போகாதிங்க. என் தங்கச்சி கூட இப்படி தான் துப்பட்டாவ போட்டுக்கிட்டு போவா. ஒரு நாள், அவ துப்பட்டா வண்டி வீல்ல மாட்டி நடு ரோட்ல தடுக்கி விழுந்து எதிரே வந்த லாரில அடிபட்டு... அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழுகை அவன் தொண்டையை அடைத்தது.
அவள் எல்லாம் புரிந்தவளாய் கண்களால் நன்றி சொல்லிவிட்டு துப்பட்டாவை எடுத்து முன் பக்கம் முடிச்சு போட்டு கொண்டு புறப்பட்டாள்.
No comments:
Post a Comment